தி ஹிந்து - தமிழ்
ஆர்.கே.நகரில் கம்யூ. கட்சிக்கே எங்கள் ஆதரவு: சீமான்
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை. எங்கள் கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சீமான் நேற்று (வியாழக்கிழமை) திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.
இதே வழக்கில் தொடர்புடைய அவரைச் சார்ந்த 40 பேரும் நேற்று திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.
திருச்சியில் கடந்த மாதம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திருச்சி எடைமலைப்பட்டிப் புதூர் போலீஸார் நாம் தமிழர் கட்சியின் இன அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி எடைமலைப்பட்டி புதூரில் மே 24-ம் தேதி நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும்,அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எடைமலைப்பட்டி பதூர் உதவி ஆய்வாளர் சுரேந்தர் கொடுத்தப் புகாரின் பேரில்சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி எடைமலைப்பட்டி போலீஸார் மே.31-ம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர்.
இதையடுத்து அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப் படி நேற்று திருச்சி நீதிமன்ற நீதிபதி முரளிதர கண்ணன் முன்னிலையில் சரண்டராகி ஜாமீன் கோரினார்.
இதையடுத்து அவர் உள்ளிட்ட 40 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, அனைவரும் ஜூன் 20,21,27,28 ஆகிய தேதிகளில் திருச்சியில் தங்கியிருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது.
இந்த வழக்குத் தேவையற்றது.தனி ஈழத்தை ஆதரித்துத் தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துத் தான் நாங்களும் மேடைகளில் பேசிவருகிறோம்.
ஆனால் தற்போது எங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வாறு பேசியிருந்தால் என்மீது வழக்குப் போடலாமே தவிர, மாநாட்டிற்கு வந்தவர்கள்,போனவர்கள் நன்றி கூறியவர்கள் என வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் போடுவது மிரட்டுவதற்காகவா? இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை. எங்கள் கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்படலாம் என்று அத்வானி கூறியிருப்பது எதை வைத்துப் பேசினார் என்பது புரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியை குறிப்பிடுகிறாரா என்பதும் தெரியவில்லை. எனவே இது அந்தக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சனை.
யோகா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, இது உடல் மட்டுமல்ல மனம் சார்ந்த ஒரு விஷயம். உடல் ஆரோக்கியத்துக்கு யோகா செய்வது நல்லது. இதற்கு மத சாயம் பூசக்கூடாது.
நான் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் தான் உறுப்பினராக உள்ளேன். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. எனவே அந்த சங்கத் தேர்தல் பற்றி எதையும் கூற விரும்பவில்லை. நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் சரத்குமார் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
கடினமான உழைப்பாளியும் கூட. அண்ணன் ராதாரவி நாடகக் கலைஞர்களை மதிக்கக் கூடியவர், அவர்களுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார்.எனவே அவர் அவர்களுக்காக குரல் கொடுப்பதில் தவறில்லை என்றார்.
மாலைமலர்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடாத கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிக்க வேண்டும்: சீமான் பேட்டி
திருச்சி, ஜூன் 19–திருச்சியில் கடந்த மாதம் 24–ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மதுரை ஐகோர்ட்டு மனுவை விசாரித்து திருச்சி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து சீமான் உள்பட 40 பேர் திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் நீதிபதி முன்பு இன்று ஆஜரானார்கள்.
பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருச்சி மாநாட்டில் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அதற்கு தனி ஈழம் தான் வழி என்றும் இதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசினேன்.
இதே கருத்தை சட்டசபையிலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சீமான் பின்னால் சென்றால் வழக்கு போடப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்போம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவை தவிர்த்து எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ஆனால் பிரசாரம் செய்யவில்லை.
இந்த தொகுதியில் போட்டியிடாத கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும்.
தென்னக நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை, முதலாவதாக அந்த சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும். கேரளா போன்ற மாநிலங்களில் தனியாக சங்கங்கள் செயல்படுகிறது. தமிழகத்தில் இச்சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி. ராதாரவி நாடக நடிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
நெருக்கடி நிலை வரும் என்று அத்வானி கூறிய கருத்து யாரை குறித்து பேசினார் என்பதை அவரிடம் தான் கேட்டு தெளிவுப்படுத்த வேண்டும். யோகாவில் சூரிய நமஸ்காரம் என்ற பிரச்சனையில் சூரிய நமஸ்காரம் என்பது அவரவர் விருப்பதை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு உள்பட பலர் உடனிருந்தனர்.
Post a Comment