Dailythanthi
திருவள்ளூர்
நடிகர் ஜெயராம் வீட்டை சேதப்படுத்திய வழக்கில் சீமான் உள்பட 14 பேர் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
வீட்டை அடித்து நொறுக்கினர்
நடிகர் ஜெயராம் கடந்த 2010–ம் ஆண்டு தமிழ் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டை சேதப்படுத்தினார்கள்.
அப்போது அங்கு வீட்டில் இருந்தவர்களையும், பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீசையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நடிகர் ஜெயராமின் மேலாளர் மைக்கேல்ராஜ் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோர்ட்டில் ஆஜர்
இந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 14 பேர் திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னால் நேற்று ஆஜரானார்கள்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வருகிற 2–ந்தேதி அவர்கள் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Dinamani
நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல் வழக்கு: திருவள்ளூர் நீதிமனறத்தில் சீமான் ஆஜர்
வளசரவாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர் ஜெயராம் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய வழக்கு தொடர்பாக திரைப்பட நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் திருவள்ளூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
திரைப்பட நடிகர் ஜெயராம் கடந்த 2010-ம் ஆண்டு டிவிக்கு அளித்த பேட்டியில், தமிழ்ப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். அப்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வளசரவாக்கம், ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அவரது உதவியாளர் மைக்கேல் ராஜ் கொடுத்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீசார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் அவ்வப்போது சீமான் உள்பட 14 பேர் ஆஜராகி வருகின்றனர். இதையொட்டி செவ்வாய்க்கிழமையும் சீமான் உள்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சீமான் உள்பட 14 பேரும் ஜூலை மாதம் 2-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
Post a Comment